மதுக் கடை எதிர்ப்பு கடையடைப்பு.. வணிகர் சங்கம் உடைந்தது.. முக்கிய நிர்வாகி விலகினார்
சென்னை: தமிழகம் முழுவதும டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று கோரி இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று அறிவித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவுக்கு எதிரப்பு தெரிவித்து மாநில இணைச் செயலாளர் பூவை. து கந்தன் என்பவர் விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கந்தன் கூறியிருப்பதாவது:
மது ஒழிப்பு போராளி சசிபெருமாள், மதுவின் கொடுமையில் இருந்து தமிழகத்தை விடுவிக்க தன் வாழ்நாளெல்லாம் போராடியதோடு அந்த நோக்கத்துக்காக உயிர்த்தியாகமும் செய்துள்ளார்.
முழு மதுவிலக்கை தமிழகத்தில் ஏற்படுத்த சசிபெருமாள் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்திட ஆகஸ்டு 4ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை நடத்திட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார். இந்த போராட்டத்துக்கு அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தனது அமைப்பு ஆதரவு தெரிவிக்காது என்று அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த மக்களின் உணர்வுக்கு எதிராக விக்கிரமராஜாவின் அறிவிப்பு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் சங்கம் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்துல் கலாம் மறைவு உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை விடப்பட்டு விட்டதால் மீண்டும் கடைகளை மூடினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி கடைகளை மூட முடியாது என்று விக்கிரமராஜா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.