ராத்திரி நேரத்து பூஜையில்... பெண்களை ஆபாச படம் பிடித்து பண வேட்டை... வருவாய் ஆய்வாளர் கைது
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கணவருக்கு தெய்வீக எண்ணெய் தருவதாக கூறி நள்ளிரவு பூஜையில் பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நாமக்கல் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவர் குணமாக அருள்வாக்கு கேட்க சென்ற பெண்ணை ஆபாச படம் எடுத்து பணம் பறித்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளரும், பூசாரியுமான ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.
நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டாம்பட்டி சண்டி கரும்புசாமி கோயிலில் பூசாரியாக இருப்பவர் ராஜேந்திரன். இவர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றிக் கொண்டே கோயிலில் அருள்வாக்கும் கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் கொல்லபட்டியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி அண்ணாமலையின் மனைவி ராணி, பூசாரி ராஜேந்திரனை சந்தித்து அருள்வாக்கு கேட்டுள்ளார்.
தெய்வீக எண்ணெய்
அப்போது தம் தரும் தெய்வீக எண்ணெய்யை அண்ணாமலை மீது தடவினால் அவரது உடல் நலம் பெறும் என்று தெரிவித்த பூசாரி, அதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
ராத்திரி பூஜை
பின்னர் தெய்வீக் எண்ணெய் வேலை செய்வதற்கு பௌர்ணமி அன்று நள்ளிரவில் பூஜை செய்ய வேண்டியுள்ளதால் ராணியை தனியாக வரசொல்லி அழைத்தார் ராஜேந்திரன். அதன்படி பூஜைக்கு வந்த அவரிடம் மஞ்சள் துணியை கொடுத்து மங்களம் உண்டாக இந்த துணியை அணிந்து வருமாறு கூறியுள்ளார்.
உடை மாற்றம்
அங்குள்ள அறைக்குச் சென்று அவர் உடை மாற்றுவதை ஏற்கெனவே தயாராக வைத்திருந்த கேமரா மூலம் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த விடியோவை அவரிடம் காண்பித்து இதை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க அவ்வப்போது பணம் பறித்துள்ளார்.
போலீஸில் புகார்
இதுதொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்தில் ராணி புகார் அளித்தார். எனினும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளுக்கு நாள் ராஜேந்திரனின் அட்டகாசம் அதிகரித்ததால் கடந்த திங்கள்கிழமை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் ராணி புகார் அளித்தார்.
சஸ்பெண்ட்
புகாரின் பேரில் விசாரணை நடத்திய கலெக்டர் ஆசியா மரியம், ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கடந்த 16 ஆண்டுகளாக அருள்வாக்கு கூறி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து வருவதாகவும், ஆரம்ப காலத்தில் மின்வாரியத்துறையில் பணியாற்றி வந்த ராஜேந்திரன், லஞ்சம் கொடுத்து வருவாய்த் துறைக்கு மாற்றலாகியுள்ளார்.
தீவிர விசாரணை
இதேபோல் ராத்திரி நேரத்து பூஜை என்று அழைத்து வேறு பெண்களையும் படம் பிடித்து மிரட்டி பணம் பறித்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன மருத்துவம்
தற்போதைய சூழலில் மருத்துவத் துறை நன்கு வளர்ச்சி அடைந்து , நவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும்போதிலும், பெண்கள் இதுபோல் போலி சாமியார்களிடம் ஏமாந்து விடுகின்றனர்.