காங்கிரஸின் பயணங்கள் முடிவதில்லையாம்.. சொல்கிறார் ஞானதேசிகன்!
சென்னை: பிரச்சார வலிமை மற்றும் பணக்காரர்களின் ஆசியாலேயே பாஜக இத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் குற்றம் சாட்டியுள்ளார்.
16வது லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது காங்கிரஸ். ஆனால், தோல்விகளால் துவளக் கூடாது என்ற புதிய கோஷத்தோடு மீண்டும் நம் பயணத்தை தொடருவோம் என அழைப்பு விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தனித்துவமான தேர்தல்...
நடந்து முடிந்த நாடாளு மன்றத்தேர்தல் ஒரு தனித்துவமான தேர்தலாகும். 10 ஆண்டுகாலம் அன்னை சோனியா காந்தியின் வழி காட்டுதலில் நடைபெற்ற டாக்டர் மன்மோகன்சிங் அரசில் ஏராளமான வளர்ச்சிதிட்டங்கள் சாதனைகள் ஸ்திரமான பொருளாதாரம் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு ஏராளமான திட்டங்கள், சிறுபான்மையினர் நலன் காக்க பிரதம மந்திரியின் 15 அம்ச திட்டம், நூறு நாள் வேலை வாய்ப்பு , ஜவஹர் லால் நேரு நகர புனரமைப்பு திட்டம், சுகாதாரத் துறையில் மாபெரும் புரட்சி, கிராமப்புற வளர்ச்சி, சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில்கள் என்று பட்டியல் தொடர்ந்தது.
வலிமையை உருவாக்கிய காங்கிரஸ்...
இந்த ஆட்சி மாறுகிறபோது 1,81,000 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கையிருப்பில் வைத்துவிட்டுச் செல்கிறோம். பி.எல்.480 அமெரிக்க கோதுமையை குழந்தைகளுக்கு இலவசமாக வாங்கிய நாடு, தங்கத்தை அடகு வைத்து நமது பொருளாதாரத்தை சரிகட்ட கடன் வாங்கிய அரசு சந்திரசேகர் தலைமையிலான அரசாகும். தங்கத்தை மீட்டு, கடனை அடைத்து, பிற நாடுகளுக்கு கடனும் சில இயற்கை பேரழிவு நிகழ்வுகளில் போது பிற நாடுகளுக்கு பொருளாதார உதவியும் செய்கிற, செய்கின்ற வலிமையை உருவாக்கிக் கொடுத்தது காங்கிரஸ் அரசாகும்.
ஊழல்கள் தவிர்க்க முடியாதது...
தனிமனித ஊழல்கள் சமூகத்தில் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த ஊழல்கள் மீது கட்சி மாச்சர்யங்கள் இல்லாமல் சுதந்திரமாக நடவடிக்கை எடுத்திருக்கிறோமா என்றால், ஆம் என்கிற பதில் தான் உரத்து வரும் ஆனாலும் ஊழல் என்கிற அந்த முகமூடியை மிக கெட்டிக் காரத்தனமாக காங்கிரஸ் அரசு மீது பா.ஜ.க. சுமத்தியது. வலிமையான பிரச்சார யுக்திகள், இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் அருளாசிகள், சமூகத்தை பிரித்து வைக்கிற மத வேற்றுமைகளை அதிகப்படுத்துகிற, வளர்க்கிற கூட்டத்தின் ஓலங்கள், சில ஊடகங்களின் ஆதிக்கம், இவையெல்லாம் ஒட்டுமொத்தமாய் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தோல்வியை சந்திக்க வைத்திருக்கிறது.
வரலாற்று உண்மை...
1984-ல் 404 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்ற காலமும், எதிர் வரிசையில் மாநில கட்சியான தெலுங்கு தேசம் வெறும் 30 இடங்களைப் பெற்று அமர்ந்ததும், பா.ஜ.க. அப்போது 2 இடங்களைப் பெற்றதும் வரலாற்று உண்மை. 2 இடங்களை மட்டுமே நாடாளுமன்றத்தில் பெற்ற எம்.ஜி.ஆர். 6 மாதத்திற்குப் பிறகு சட்டமன்றத்தை பிடித்த வரலாறும் தமிழகத்தில் நடந்தேறியிருக்கிறது.
ஆராய்ச்சி தேவை...
ஆகவே, இந்த தோல்வி என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆனால் கவலைக்குரியதல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியாக மக்களின் மனோநிலை ஏன் வந்தது என்பதை யோசிக்க வேண்டும். ஆனால் அதற்காக கட்சியினர் துவண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. இந்த தேர்தலில் கடும் உழைப்பை தந்த சோனியா காந்தி அம்மையாருக்கும் இளந் தலைவர் ராகுல்காந்திக்கும் என் நன்றி உரித்தாகும்.
ஜிகே வாசனுக்கு நன்றி...
ஏற்கனவே ஒரு அறிக்கையில் நான் குறிப்பிட்டதைப் போல, பல்வேறு பொருளாதார நெருக்கடியிலும் கண் துஞ்சாது, இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சி தோழர்களை தாழ் பணிந்து வணங்குகிறேன். வாக்களித்த மக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை வாக்களிக்காத மக்கள் தங்களது நிலையை எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். தேர்தல் பணியாற்றிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. 40 தொகுதிகளிலும் சுற்றி வந்து தேர்தல் பணியாற்றிய ஜி.கே. வாசனுக்கு எங்களுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய கோஷம்...
‘போற்றுவதால் என் உடல் புல்லரிக்காது - தூற்றுவதால் என் மனம் இறந்துவிடாது" என்று கவியரசு சொன்னதைப் போல, தோற்பதால் நாங்கள் துவண்டுவிட மாட்டோம் என்கிற புதிய கோஷத்தோடு மீண்டும் நம் பயணத்தை தொடருவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.