அடங்காத காங். அக்கப்போர்! ஈவிகேஎஸ் இளங்கோவன் பொதுக்கூட்டத்துக்கு திருநாவுக்கரசருக்கு 'நோ' அழைப்பு!
சென்னையில் நாளை ஈவிகேஎஸ் இளங்கோவன் பொதுக் கூட்டத்துக்கு திருநாவுக்கரசரை அழைக்காததால் பஞ்சாயத்து வெடித்துள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் அரங்கேறும் அக்கப்போர் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிடப் போவதில்லை. சென்னையில் நாளை ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது புதிய பஞ்சாயத்து.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் விலகிய நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறியது டெல்லி மேலிடம். அப்போது திருநாவுக்கரசரின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
உடனே பொங்கி எழுந்த இளங்கோவன் ஆதரவாளர்கள், கட்சிகள் மாறி வந்த திருநாவுக்கரசை நியமிக்கக் கூடாது என போர்க்கொடி தூக்கி டெல்லிக்கு படையெடுத்தனர். ஆனால் திருநாவுக்கரசரையே தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்தது.
தொடக்கம் முதலே குடைச்சல்
சும்மா விட்டுவிடுவார்களா இளங்கோவன் தரப்பு? தொடக்கம் முதலே திருநாவுக்கரசருக்கு குடைச்சல் கொடுத்து வந்தது... அவரும் இதை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார்.
சசிக்கு ஆதரவு
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து திருநாவுக்கரசர் சசிகலா அதிமுகவுக்கு ஆதரவாகவே பேசி வந்தார். இதனால் கடுப்பாகிப் போன இளங்கோவன், திருநாவுக்கரசர் விரைவில் அதிமுகவில் சேருவார் என அதிரடி காட்டி தாக்கினார்.
திருநா யாரு?
திருநாவுக்கரசரும் இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கண்டுகொள்ளாமல் விட்டார். இதன் உச்சமாக, ஆமா திருநாவுக்கரசர்னா யாரு? என்று கேட்டு வெறுப்பேற்றினார் இளங்கோவன்.
இரவில் சொன்னாரா?
இதில் கோபமடைந்த திருநாவுக்கரசர், இப்படி இளங்கோவன் சொன்னது இரவிலா? என நக்கலடித்தார். இது தொடர்பாக திருநாவுக்கரசர் தரப்பும் இளங்கோவன் தரப்பும் மாறி மாறி டெல்லிக்கு புகார்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.
இளங்கோவன் பொதுக்கூட்டம்
இந்த நிலையில் சென்னையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு விவகாரத்தை முன்வைத்து நடைபெறும் இக்கூட்டத்தை இளங்கோவன் ஆதரவாளர் ரங்கபாஷ்யம் ஏற்பாடு செய்திருக்கிறார்.
டெல்லிக்கு புகார்
ஆனால் இக்கூட்டத்துக்கு திருநாவுக்கரசரை அழைக்கவில்லை. கட்சியின் மாநிலத் தலைவரையே அழைக்காமல் பொதுக்கூட்டம் நடத்துவதா? என அடுக்கடுக்கான புகார்களை டெல்லிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது திருநாவுக்கரசர் கோஷ்டி.