விஜயகாந்த்துடன் ம.ந.கூட்டணியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கருத்து வேறுபாடு?
சென்னை: தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி அமைத்துள்ள கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் அதிருப்தி பரவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை நிரூபிக்கும் வகையில் அக்கட்சியின் திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி போட்ட பேஸ்புக் போஸ்ட்டும் சலசலப்பைக் கிளப்பி விட்டது.
மக்கள் நலக் கூட்டணி இன்று தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டது. அதன்படி தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பேசி முடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இது பாண்டவர் கூட்டணி, விஜயகாந்த் கூட்டணி, கேப்டன் கூட்டணி, பட்டையைக் கிளப்பும் கூட்டணி என்று தலைவர்களும் பேசி முடித்து விட்டுக் கிளம்பி விட்டனர்.
தோழர்களிடையே அதிருப்தி?
இந்த நிலைியல்தான் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் விஜயகாந்த்துடன் கூட்டணி வைத்திருப்பது இரு வேறு கருத்துக்களை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
குறுகிய பார்வையுடன் கூடியது
இந்தக் கூட்டணியானது குறுகிய பார்வையுடன் கூடியது, இது குறுகிய கால வெற்றியைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டது, நீண்ட கால நோக்கம் இதில் இருப்பதாக தெரியவில்லை என்று கம்யூனிஸ்ட்கள் பலர் கருதுகிறார்களாம்.
மார்சிஸ்ட்டுகளுக்குப் பிடிக்கவில்லை
விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்ந்ததை "மார்க்ஸ்" எப்படி ரசிப்பார் என்று பலரும் தங்களைக் கிண்டலடிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புலம்புகின்றனராம்.
முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் விருப்பமில்லை
குறிப்பாக முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை முன்கூட்டியே அறிவித்ததை கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரும் ரசிக்கவில்லையாம். இருந்தாலும் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும், திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அதுகுறித்து பகிரங்கமாக விவாதிக்காமல் உள்ளனராம்.
பாலபாரதியின் போஸ்ட்
இந்த நிலையில்தான் திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி தனது பேஸ்புக் பக்கத்தில் ''நல்லதோர் வீணை!'' என்று ஒன்லைன் போஸ்ட் போட்டிருந்தார். இது விஜயகாந்த் கூட்டணியை அவர் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக கூறி கருத்துக்கள் கிளம்பின.
அது இல்லை இது வேறு
இதனால் புதிய பரபரப்பு கிளம்பியது. பலரும் அதில் நீங்கள் துணிச்சலுடன் கருத்தை வெளியிட்டுள்ளீர்கள் என்று கூறத் தொடங்கி விட்டனர். ஆனால் இந்த போஸ்ட்டை பின்னர் பாலபாரதி நீக்கி விட்டார்.
வேறு கருத்து
வேறு கருத்து
இதுகுறித்து பாலபாரதி இதுவரை நேரடியாக விளக்கம் எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் அவர் கூறியதாக பத்திரிகையாளர் வேங்கடபிரகாஷ் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தான் வேறு ஒரு விஷயம் குறித்து நேற்றிரவு கருத்துப் போட்டதாகவும், அது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதாகவும் பாலபாரதி கூறியதாக வேங்கடபிரகாஷ் கூறியுள்ளார்.