மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்: திருமாவளவன்
சேலம்: சேலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு, இலங்கை அரசு மற்றும் மீனவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, ‘' மதுகடைகளை மூட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசு மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும், இதனை வலியுறுத்தி வருகிற 31-ந்தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே நாளில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பருப்பு, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்தும் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு, இலங்கை அரசு மற்றும் மீனவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
பொறியியல் பட்டதாரி பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட வேண்டும். கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றினால் தான் நியாயமான, நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளுக்கு துகுந்த தண்டனை கிடைக்கும்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டில் தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவணப் பதிவுப்படி கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 72 தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒருவேளை மக்கள் நல கூட்டு இயக்கம் நாளை கூட்டணியாக உருவானால், அதன் கொள்கைகளில் உடன்பாடு உள்ளவர்களை ஏற்றுக் கொள்வோம்", என்று தெரிவித்தார்.