இட்லி 5 ரூபா... சாம்பார் 10 ரூபா.. விரைவில்!!
சென்னை: 2 இட்லி வாங்கினால் 2 கப் சாம்பார் வாங்குவது நம் ஆட்களின் வாடிக்கை. இனி அப்படி வாங்கி சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில், துவரம் பருப்பு, பாசிப்பருப்புகளின் வரலாறு காணாத விலை உயர்வால் சாம்பருக்கு தனியாக விலை நிர்ணயம் செய்யவும் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் வரை ஓரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 15 நாட்களில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.225 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் சாதாரண மக்கள்கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ரேசன் கடைகளில் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பருப்பும் கடந்த சில மாதங்களாக முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால், ஏழை எளியமக்கள் இந்த விலை கொடுத்து வாங்கி சாம்பார் வைக்க முடியாமல், காய்கறிகளை மட்டுமே உபயோகித்து காரக்குழம்பு வைத்து சமாளித்து வருகின்றனர்.
சாம்பாரின் ஆதிக்கம்
ஹோட்டல்களில் சாம்பாரை தவிர்க்க முடியாது. சாம்பார் இட்லி, சாம்பார் வடை மற்றும் உணவுக்கு சாம்பார் வைக்கவேண்டு. இவை அனைத்திற்கும் பருப்பு தேவை என்பதால், சிறு ஹோட்டல் உரிமையாளர்கள் தற்போது திணறிவருகின்றனர்.
சாம்பாருக்கு தனி விலை
பருப்புகளின் அதிரடி விலை உயர்வினார் சிறு சிறு ஹோட்டல்களை நடத்துவதே பெரும் சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது. சாம்பார் என்பது தவிர்க்க முடியாத விசயம். சாம்பாரை தவிர்த்து வேறு வகையான குழம்புகளை வாடிக்கையாளர்களுக்கு தரமுடியாது. இந்த நிலையில், சாம்பாருக்கு என்று தனி விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவம்பரில் அறிவிப்பு
மேலும், சாம்பாருக்கு திடீரென விலை நிர்ணயம் செய்தால், பொதுமக்கள் ஆவேசமடைவார்கள் என்ற காரணமும் உள்ளதால், உணவு பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நவம்பர் மாதங்களில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
நஷ்டத்தில் ஹோட்டல்கள்
சில ஹோட்டல் உரிமையாளர்கள், பருப்பு விலை பல மடங்கு விலை உயர்ந்துவிட்டது. அதுவும், சில உணவு பொருட்களுக்கு அதிகளவு சாம்பார் கொடுக்க வேண்டியுள்ளது. துவரம் பருப்பு விலை உயர்வால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்று கூறியுள்ளனர். பருப்புகளின் விலை உயர்வால், சாம்பாருக்கு தனியாக விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும். இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான் என்று தெரிவித்துள்ளனர்.
உணவுகளின் விலை அதிகம்
சாம்பாருக்கு தனி விலை வைக்க முடியாத பட்சத்தில், சில உணவு பொருட்களின் விலை உயர்த்தியே ஆக வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாகவே சில ஹோட்டல்களில் சப்பாத்தி, புரோட்டாவிற்கு தனியாக காசு கொடுத்து கிரேவி வாங்க வேண்டியுள்ளது. 40 ரூபாய் சப்பாத்திக்கு 100 ரூபாய் கிரேவி வாங்க வேண்டியுள்ளது. இட்லிக்கு சாம்பார் தனியாக ரேட் நிர்ணயம் செய்யும் பட்சத்தில் பேச்சிலர்களின் பாடுதான் படு திண்டாட்டம் ஆகிவிடும்.
அம்மா உணவகம்
ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை உயரும் பட்சத்தில் நடுத்தர மக்களும் இனி அம்மா உணவகத்தை நோக்கி படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும் சாம்பார் நாம் வேண்டும் அளவிற்கு ஊற்றி சாப்பிடும் அளவிற்கும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.