தொடரும் மீ்ன் பிடி தடைகாலம்-உச்சத்தில் மீன்கள் விலை
தூத்துக்குடி: மீன்பிடி தடைக்காலத்தை ஒட்டி தூத்துக்குடியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை.
மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரம் மாதம் 15ம் தேதி தொடங்கியது. இந்த மாதம் 29ம் தேதி வரை தடைக்காலம் நீடிக்கும். இதன் காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு படகுகள் மற்றும சிறு துடுப்பு படகுகள் மூலம் மட்டுமே தற்போது மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இதனால் குறைந்த அளவே மீன் கிடைத்து வருகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் கோழிக்கறி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து மீன்கள் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் மீன்களின் வரத்து குறைவு காரணமாக அவற்றின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக சீலா, வஞ்சிரம் மீன்கள் கிலோ ரூ.1000 வரையும், விளை மீன்கள் ரூ.500, ஊழி மீன் ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சாளை மீன்கள் ரூ.10க்கு 3 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மீன்பிடி தடை எதிரொலியாக விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன்பிடி உபகரணங்களை பழுது பார்த்தல், பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி பகுதியில் மீனவர்கள் மிக தீவிரமாக வலைகளை பழுது பார்த்து வருகின்றனர். மேலும் படகுகளுக்கு பெயிண்டிங் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகின்றனர். மீன் பிடி தடைக்காலத்தில் அரசு உதவி தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.