கடும் வறட்சி எதிரொலி.. காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
கடும் வறட்சி நிலவுவதால் நெல்லை மாவட்டத்தில் காய்கறி விலை உச்சத்தை தொட்டுள்ளது.
நெல்லை: வறட்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் காய்கறி விலை உயர்ந்து வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கடந்தாண்டு பருவமழை சரியாகப் பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. தற்போது கோடை முடிந்தும் தென் மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகி வருகிறது.
முக்கிய நகரங்களில் வெயில் சதத்தை தாண்டி பதிவாகிவரும் சூழ்நிலையில் காய்கறிகள் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடியைப் பொறுத்தவரை உள்ளூர் காய்கறிகளான கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கூட, பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப அளிக்க முடியாத நிலை உள்ளது.
உள்ளூர் காய்கறி சந்தையில் மொத்த விலைக்கு வாங்கி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் காய்கறி தேவை அதிகரித்து, அவற்றின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக சிறிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் கிலோ ரூ.70, 80 என இருந்த விலை தற்போது ரூ.150, 160 என விற்கப்படுகிறது. ஆனால் பல்லாரி வெங்காயம் விலை அதே நிலையில் இருப்பதால் அதை வாங்கி பொது மக்கள் சமாளித்து வருகின்றனர்.
நெல்லை மார்க்கெட்டில் காய்கறி விலை தற்போது கிலோவுக்கு கத்தரிககாய் ரூ.40 வெண்டைக்காய் ரூ.32, கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.75, காலி பிளவர் ரூ.60, இஞ்சி ரூ.50, தேங்காய் ரூ.37, முள்ளங்கி ரூ.40, மல்லி ரூ.90, தக்காளி ரூ.25, மிளகாய் ரூ.50 என விலை உயர்ந்து காணப்படுகிறது.