காவிரி நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும்- பிரகாஷ் ராஜ்
தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீண்ட கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும் என்று கூறியுள்ளார்.
காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி பிரச்சினை இரு மாநில மக்களிடையே மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
காவிரி கறைபட்டது
நதியோடு அரசியலை கலக்க வேண்டாம் என்று நடிகர் பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது.
அரசியல் கண்ணாடு மூச்சி
ஒரே தேசத்துக்குள் இருக்கின்ற சகோதர மாநிலங்களால் தண்ணீரை சுமூகமாக பகிர்ந்துகொண்டு நட்போடு இருக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதற்கு ஓட்டு அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை.
விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல்.
அரசியல் லாபம்
ஓட்டுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியை காவிரியால் கடக்கவே முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பிரித்து மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர்.
மணல் மஃபியாக்கள்
அரசியல் தலைவர்கள் தீர்வு தேடுவதில் அக்கறை காட்டாமல் உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களை பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை.
நதிநீர் பங்கீடு
இனிமேலும் இந்த நதிநீர் அரசியல் தொடர்ந்தால் அது மீட்க முடியாத இழப்புகளைத் தரும் பேராபத்தில் முடியும்.
கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல் தீர்வு தேடுகிற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்சனைகளையும், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளையும் தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது.
சண்டையிட வேண்டாம்
உண்மைகள் மக்களைச் சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து, அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.