சென்னை மழை: பாதிக்கப்பட்ட மக்களின் அடுத்த கட்ட தேவைகளை நிறைவேற்ற வாருங்கள் - ஆர் ஜே பாலாஜி
சென்னை: "சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் அடுத்த கட்ட தேவைகளை நிறைவேற்ற வாருங்கள்" என்று நடிகர் ஆர் ஜே பாலாஜி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நடிகர்கள் ஆர் ஜே பாலாஜி, சித்தார்த், சின்மயி ஆகியோர் மற்ற நல்ல உள்ளங்களுடன் சேர்ந்து நிறைவேற்றி வருகின்றனர்.
சுமார் 600க்கும் மேற்பட்ட நபர்களுடன் சேர்ந்து அவர் செய்த இந்த சேவை மக்களுக்கு மிகவும் உதவியாக மாறியிருக்கிறது.இந்நிலையில் அவர்களின் வாழ்வாதரங்களை மீட்டுத் தர வாருங்கள் என்று ஆர் ஜே பாலாஜி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சித்தார்த்,ஆர் ஜே பாலாஜி, சின்மயி
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் துயர் துடைப்பதில் சித்தார்த், ஆர்ஜே பாலாஜி மற்றும் சின்மயி ஆகியோர் தொடர்ந்து முன்னின்று வருகின்றனர். பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இவர்கள் பால், உணவு, குடிதண்ணீர், போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆர் ஜே பாலாஜி கோரிக்கை
இந்நிலையில் நடிகர் ஆர் ஜே பாலாஜி சமூக வலைத்தளத்தில் சுமார் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். பலரின் பாராட்டைப் பெற்று வரும் அந்த வீடியோவில் உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு ஒரு சில கோரிக்கைகளை அவர் முன் வைத்திருக்கிறார்.
உணவு மட்டுமே
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் உணவு, பால், குடிநீர் வழங்குவதோடு நமது வேலை முடிந்து விடவில்லை. அவர்களின் வாழ்வை சீரமைத்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த மழையால் பல்வேறு ஆசிரமங்கள், குழந்தைகள் நல விடுதிகள் மற்றும் மறுவாழ்வு இல்லங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் மறுபடி முதலில் இருந்துதான் தொடங்க வேண்டும்.
மழையால் போரடிக்கிறது
மழையால் போரடிக்கிறது என்றுதான் இந்த மீட்புப் பணியில் இறங்கினோம் ஆனால் மக்களின் துயரைப் பார்க்கும்போது இவற்றை நாங்கள் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தோம். நாங்களே எதிர்பாராத வண்ணம் எங்களுடன் இணைந்து 600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஆனால் மக்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.
எங்களால் மட்டும் சாத்தியமன்று
நான், சின்மயி, சித்தார்த் மற்றும் ஒரு 600 பேரை வைத்துக்கொண்டு இது கண்டிப்பாக முடியாது. நிறைய என்ஜிஓக்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து மக்களாகிய நீங்களும் முன்வரவேண்டும் என்று ஆர் ஜே பாலாஜி கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஆர் ஜே பாலாஜியின் செயல்கள் மட்டுமின்றி அவரின் இந்த சிந்தனைகளும் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதான். இதைப் படிப்பவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கிட முன்வரலாமே!