ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஓய்ந்தது பிரசாரம் : இன்று முதல்2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு லீவ்!
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு இன்று மாலை முதல் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடந்து வந்த வாக்குசேகரிப்பு பிரச்சாரம் இன்று மாலையோடு முடிவடைந்து உள்ளது. இதனையடுத்து தொகுதியை சாராதவர்கள் உடனடியாக வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரோ, அவரின் கட்சி சார்ந்த பிரதிநிதிகளோ தொலைக்காட்சி விவாதங்கள் தேர்தல் வாக்குப்பதிவு நாள் வரை பங்கேற்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேலும், தேர்தல் சமயத்தில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, இன்று மாலை ஐந்து மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 21ம் தேதி மாலை வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 24ம் தேதியும் தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் மது கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.