மிஷன் ஆர்.கே. நகர்... போட்டி போட்டி கவனிக்கும் அரசியல் கட்சிகள் - பணமழையில் நனையும் வாக்காளர்கள்
ஆர்.கே. நகரில் வெற்றிக்காக அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு கவனிப்பதால் வாக்காளர்கள் பணமழையில் நனைகின்றனர். மிஷன் ஆர்.கே. நகர் என்று பெயரிட்டுள்ளனர்.
சென்னை: தேர்தல் ஆணையம் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு கண்கொத்தி பாம்பாக கவனித்தாலும் எவ்வளவோ ஏமாத்திட்டோம் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றுவதா பெரிய விசயம் என்று கூறி வாக்காளர்களுக்கு பணமழையை ரகசியமாக பொழிகிறார்களாம் அரசியல் கட்சியினர்.
ஒருத்தர் கொடுத்தாலே அதிர்ஷ்டம், இதில் 4 பேர் மாறி மாறி கொடுத்தால் கேட்கவா வேண்டும். பட்டுப்புடவை, தங்கக் காசு, டோக்கன்கள் என 'மிஷன் ஆர்.கே. நகர்'
பெயரிட்டு உள்ளனர்.
பரிசுக்கூப்பன்களை வண்ணாரப்பேட்டை, பாரிமுனை பகுதிகளில் உள்ள கடைகளில் கமுக்கமாக கொடுத்து பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர். என்னதான் நடக்கிறது ஆர்.கே. நகரில் என்று விசாரித்ததில் வாக்காளர்கள் பணமழையில் நனைவது தெரியவந்துள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
ஆர்.கே.நகருக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. அரசியல் கட்சியினர் காலை, மாலை என வாக்காளர்களை சென்று கவனிக்கின்றனர்.
பூமழை தூவி வரவேற்பு
பூ தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் வரவேற்கின்றனர். வரவேற்புக்கு தகுந்தவாறு அவர்களுக்கு சன்மானம் போய் விடுகிறது. தேர்தல் ஆணையம் எத்தனையோ கெடுபிடிகளை செய்தாலும் கமுக்கமாக டோக்கன்கள் கைமாறுகின்றன.
ஜெயித்தே ஆகவேண்டும்
அதிமுகவில் இருந்து பிரிந்த இரு அணிகளுமே வெற்றிக்காக போராடுகின்றன. கூடவே திமுகவும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்க நினைக்கிறது. எனவே வெற்றிக்கான இலக்கு நோக்கி அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஓடுகின்றனர்.
வீடு வீடாக கவனிப்பு
வாக்காளர்களை அனைவரும் மாறி மாறி கவனிக்கின்றனர். ஒரு வீட்டில் எத்தனை ஓட்டுக்கள் இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல மட்டன், சிக்கன், மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்து, அதற்கேற்ப டோக்கன்களையும் அரிசி பைக்குள் போட்டு அனுப்புகிறார்களாம். அதை கடைகளுக்கு கொண்டு போய் கொடுத்து மாற்றிக்கொள்கிறார்களாம்.
இன்னும் எதிர்பார்க்கிறோம்
ஒரு பார்ட்டி ரூ. 3000 கொடுத்தால் இன்னொரு பார்ட்டி ரூ.5000 கொடுக்கிறார்களாம். இவ்ளோதானா நாங்க இன்னமும் எதிர்பார்க்கிறோம் என்று கேட்பவர்களுக்கு இது முதல் தவணைதான் கவலைப்படாதீங்க. தனி கவனிப்பு இருக்கு என்று கூறி அடையாளம் போட்டு செல்கிறார்களாம். வாக்காளர்களுக்கு மாறி மாறி பணம் கொடுப்பதால் ரூ. 100 கோடி அளவிற்கு பணமழை பொழியும் என்று உளவுத்துறை கணக்கெடுத்துள்ளது.
மிஷன் ஆர்.கே. நகர்
ஆர்.கே. நகரில் வெற்றிதான் அதிமுக யார் பக்கம் என்பதை தீர்மானிக்கும் என்பதை மனதில் வைத்து டிடிவி தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் 'வைட்டமின் ப'வை களமிறக்கியுள்ளனர். டிடிவி தினகரனின் ஆட்களை ஆங்காங்கே கைது செய்தாலும் தற்போது மகளிர் சுய உதவி குழுவினர் போர்வையில் பணம் கை மாறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையம்
வாக்காளர்களுக்கு மாறி மாறி பணம் கொடுப்பதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் நடந்தது போல நடவடிக்கை எடுக்கலாமா என்று தேர்தல் ஆணையம் யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தேர்தல் ரத்தாகி மீண்டும் அறிவிக்கப்பட்டால் இப்ப கொடுத்தது போல மீண்டும் கொடுக்க வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறார்களாம் அரசியல் கட்சியினர். என்ன நடக்கப் போகிறதோ ஆர்.கே. நகரில் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.