களைகட்டிய ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்- 6 முனைப் போட்டியால் அனல் பறக்கும்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் பலமுனைப் போட்டியால் அனல் பறக்கிறது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி என்று கூறப்பட்டாலும் 6 முனைப்போட்டியால் தேர்தல் களம் களைகட்சியுள்ளது. பிரச்சாரத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. திங்கட்கிழமை டிசம்பர் 4ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
பலமான போட்டி
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் என்.மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளனர். பலமான போட்டியே திமுக, அதிமுக இடையேதான் என்றாலும் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார்.
தினகரன் வேட்புமனு தாக்கல்
டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தனக்குத் தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்டு வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டார். அண்ணா இல்லாத கருப்பு வெள்ளை சிவப்பு கொடியோடு வந்து அவர் தாக்கல் செய்தார்.
தொப்பி கிடைக்குமா?
டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் சுயேட்சை என்பதால் கிரிக்கெட் மட்டை, விசில் சின்னத்தையும் கேட்டுள்ளார்.
தினகரன் கடும் சவாலை ஏற்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
களமிறங்கிய விஷால்
பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அரசியலில் விஷால் ஆழம் பார்ப்பதால் ஆர்.கே. நகரில் இப்போது வரைக்கும் 6 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. விஷால் எந்த நம்பிக்கையில் களமிறங்குகிறார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்
தீபாவும் களமிறங்குவார்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அவர் இன்னமும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தீபாவும் வேட்புமனு தாக்கல் செய்தால் ஆர்.கே.நகரில் 7முனைப்போட்டியாகிவிடும்.
மருதுகணேசுக்கு ஆதரவு
தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.
மதுசூதனன் நம்பிக்கை
அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலையை நம்பி களமிறங்குகிறார். அவருக்கு அதிமுகவிலேயே எதிர்ப்பு இருக்கிறது என்று எதிர்கட்சியினர் கூறினாலும் அனைவரும் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்யவே நினைப்பார்கள்.
பிரச்சாரத்தில் அனல் பறக்கும்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் களைகட்டியுள்ளது. கருணாஸ் உள்ளிட்ட மூவர் அணி இதுவரை யாருக்கு ஆதரவு என்று கூறவில்லை. நடிகர் சங்கத்தேர்தலில் விஷால் உடன் இணைந்திருந்த கருணாஷ் இடைத்தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பலமுனைப் போட்டியால் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.