ஏரியா ரிப்போர்ட்டர் டூ திமுக வேட்பாளர்: மருதுகணேஷ் பயோடேட்டா
ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் எம். மருதுகணேஷ் போட்டியிடுவார் என கட்சித்தலைமை அறிவித்துள்ளது.
சென்னை: தினகரன் நாளிதழின் ஏரியா நிருபராக பணியாற்றிய மருதுகணேஷ் ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி ஆர்.கே. நகர். அவர் மரணமடைந்த காரணத்தினால் தொகுதி காலியானது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட போது அவரை எதிர்த்து பெண் வேட்பாளர்களே போட்டியிட்டனர். திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பாமக சார்பில் சமூக சேவகர் ஆக்னஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை தேவி ஆகியோர் போட்டியிட்டனர்.
பெண்கள் ஓட்டுக்களைக் கவர அனைத்து கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். ஆனால் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார்.
திமுக சார்பில் போட்டியிட்ட சிம்லாவுக்கு தொகுதி மக்களிடையே போதிய அறிமுகம் இல்லாதததால் கடந்த முறை திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததாக, கட்சியினர் தலைமைக் கழகத்தில் காரணம் கூறினர்.
இதனால்தான் ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது மக்களுக்கு நன்றாக அறிமுகமான மருதுகணேஷ் மீது நம்பிக்கை வைத்து ஸ்டாலின் அவரைக் களமிறக்கினார். பணப்பட்டுவாடா புகாரினால் அந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 8 மாதம் கழித்து மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆர்.கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக என்.மருதுகணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த மருதுகணேஷ்
திமுக வேட்பாளர் மருது கணேஷ், 42, பிகாம் பிஎல் படித்துள்ளார். தினகரன் நாளிதழின் தண்டையார்பேட்டை ஏரியா நிருபரான மருது கணேஷ், வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.
இரண்டு முறை அக் கட்சியில் வட்டச் செயலாளராக இருந்தவர். தற்போது ஆர்.கே. நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக உள்ளார்.
மருதுகணேசின் தாயார் பார்வதி 1996 முதல் 2001 வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். தற்போது திமுக பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக பிளவுபட்டிருந்தது. இம்முறை இரட்டை இலை சின்னத்தோடு அதிமுக களம் காண்கிறது. வேட்பாளர் யார் என்பது பற்றி இன்னமும் முடிவாகவில்லை. அதிமுக வேட்பாளர் வெல்வாரா? அல்லது மண்ணின் மைந்தரான மருதுகணேஷ் வெற்றிவாகை சூடுவாரா பார்க்கலாம்.