ஆர்.கே. நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார்? - ஸ்டாலின் இன்று நேர்காணல்
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்துகிறார்.வேட்பாளர் யார் என்பது இன்று மாலை தெரியும்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான நேர்காணல் இன்று மாலை நடக்கிறது. தொடர்ந்து இரவில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர் கே நகர் சட்டசபைத் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இடைத்தேர்தல் களம் படுபரப்படைந்துள்ளது.
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டு பக்கம் பிரிந்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார்.
திமுக விருப்பமனு
திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. நேற்றுடன் விருப்பமனுக்கள் பெறும் நாள் நிறைவடைந்தது. 25 ஆயிரம் ரூபாய் கட்டி விருப்பமனு அளித்துள்ளனர்.
20 பேர் போட்டியிட விருப்பம்
தேர்தலில் ஏற்கனவே ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக மகளிர் அணி பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், சுந்தர்ராஜன், சுவிஸ் ராஜன், மயூரி, ஏ.டி.மணி, ரோஸ் பொன்னையன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திமுக வேட்பாளர் யார்?
இவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணி நடக்கிறது. மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார். இதில் வேட்பாளர் உறுதி செய்யப்படுவார். அதைத் தொடர்ந்து இன்று இரவோ அல்லது நாளையோ ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.
திமுக வியூகம்
அதிமுக பிளவுபட்டுள்ளதால் ஆர் கே நகரை வென்றே ஆக வேண்டும் என்று திமுக வியூகம் வகுத்துள்ளது. எனவே வலுவான வேட்பாளரை அறிவித்து இடைத்தேர்தலில் வெல்ல திட்டம் தீட்டியுள்ளது திமுக. திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் இறங்க உள்ளார். மாநிலம் முழுவதும் இருந்து மாவட்ட செயலாளர்களை ஆர் கே நகரில் களமிறக்க திமுக திட்டம் தீட்டியுள்ளது.