ஆர் கே நகர் இடைத்தேர்தல்: திமுகவிற்கு மமக ஆதரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை: ஆர். கே நகரில் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை ஆதரித்து ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள்.
வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, குடிநீர்ப் பஞ்சம், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, மீனவர்கள் படுகொலை, நிதி நெருக்கடி பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தற்போதைய நிலையற்ற அதிமுக அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காததால் தமிழக மக்கள் கடுமையான பாதிப்பிற்கு இலக்காகியிருக்கிறார்கள்.
மக்களை மேலும் வஞ்சிக்கும் வகையில் இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமான மதிப்பு கூட்டு வரியை பெட்ரோல், டீசல் மீது அதிமுக அரசு விதித்துள்ளது. பால் விலையும் சப்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தகைய மக்கள் விரோத அரசுக்கு தகுந்த தண்டனை வழங்க ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நல்லதோர் வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்தேர்தலில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயலாற்றும் திமுகவுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.