போலி கையெழுத்து... விஷால் மீது நடவடிக்கை பாயும் - தேர்தல் அலுவலர்
ஆர்.கே. நகரில் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரத்தில் விஷாலை முன்மொழிந்த இருவரும், தங்களை யாரும் மிரட்டவில்லை என விளக்கம் அளித்துள்ளதால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: வேட்புமனுவில் விஷால் போலியாக கையெழுத்து போட்டதாக புகார் அளித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் விஷாலுக்கு, அதே பகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். வேட்புமனு பரிசீலனையின் போது விஷாலை முன்மொழிந்தவர்களில் தீபன், சுமதி ஆகிய தாங்கள் முன்மொழியவில்லை என்றும், போலியான எங்களது கையெழுத்து போடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி முன்பு தெரிவித்தனர். இதனால், விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆடியோ ஆதாரங்களை விஷால் அளித்ததைத் தொடர்ந்து அவரது மனு ஏற்கப்பட்டது. தன்னை முன்மொழிந்தவர்களை மிரட்டியதாக கூறினார் விஷால். ஆனால், இரவு 11 மணிக்கு மீண்டும் மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பாளர் பட்டியல் வெளியிடு
இதனிடையே, விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்த இருவரும் மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலரை சந்தித்து விளக்கம் அளிக்கும் பட்சத்தில் மனு மீது மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கவே வேட்பாளர் லிஸ்ட் வெளியிடும் கடைசி நாளான நேற்றும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இருவரையும் அழைத்து வந்து விளக்கம் தராத காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
ட்விட்டரில் விஷால்
இந்நிலையில், விஷாலை முன்மொழிந்து பின்பு மறுப்பு தெரிவித்த 2 பேரையும் காணவில்லை என நடிகர் விஷால் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் தேர்தலில் போட்டியிடுவதை விட, காணாமல் போன இருவரின் பாதுகாப்பு மிக முக்கியம் என குறிப்பிட்டிருந்தார்.
முன்மொழிந்தவர்களிடம் விசாரணை
விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன் என்று அறிக்கை வெளியிட்ட தேர்தல் அலுவலர், விஷாலை முன்மொழிந்த சுமதி, தீபன் என்ற இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், தாங்கள் விஷாலை முன்மொழியவில்லை என்று எழுத்துப்பூர்வமாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிராகரித்தது ஏன்?
முன்மொழிந்த நபரை சிலர் கட்டாயப்படுத்தியதாகக் கூறி விஷால் ஆடியோ க்ளிப் ஒன்றை தம்மிடம் தந்ததாகவும், ஆனால் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என்றும் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். எனவே, விஷாலின் வேட்புமனுவை நிராகரிப்பதாக தேர்தல் அலுவலர் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
போலி கையெழுத்து
இதனிடையே விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டதாக கூறப்படும் தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் தேர்தல் பார்வையாளர்களை சந்தித்து தாங்கள் விஷாலை முன்மொழிந்து வேட்பு மனுவில் கையெழுத்திடவில்லை என்று விளக்கம் அளித்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் அளித்த விளக்கத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடியோவாக பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மிரட்டவில்லை
விஷால் வேட்புமனு விவகாரத்தில் இது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்களை யாரும் மிரட்டவில்லை என விஷாலை முன்மொழிந்த இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து வேட்புமனுவில் விஷால் போலி கையெழுத்திட்டார் என புகார் அளித்தால் விஷால் மீது நடவடிக்கை பாயும் என தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.