சொல்லியடித்த தினகரன்.. நவகிரகங்களின் நல் ஆசி மொத்தமாக கிடைச்சிருச்சோ!
நவகிரகங்களின் நல் ஆசி மொத்தமும் தினகரனுக்கு கிடைத்து விட்டதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
சென்னை: சனி, குரு, ராகு கேது மட்டுமல்ல, நவகிரகங்களின் மொத்த பார்வையும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு சாதகமாகவே திரும்பியுள்ளது. அந்தளவிற்கு தினகரனுக்கு திகட்ட திகட்ட வெற்றியை பரிசாக கொடுத்துள்ளனர் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள்.
மூக்குப்பொடி சாமியார் தொடங்கி கால பைரவர் வரை விடாமல் விரட்டி விரட்டி தரிசனம் செய்தார் டிடிவி தினகரன். திகார் சிறையில் இருந்து திரும்பிய பின்னர் கடந்த 5 மாதகாலமாக அவரது கவனம் முழுவதுமே ஆர்.கே.நகர் மீதுதான் இருந்தது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்படாவிட்டாலும், தான்தான் வேட்பாளர் என்பது போல நடந்து கொண்டார் தினகரன். எப்போது போய் பார்த்தாலும் கை நிறைய பணத்தை அள்ளிக்கொடுத்தாராம் தினகரன்.
சுயேச்சை தினகரன்
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகரில் அதிமுக அம்மா அணி வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தை போட்டியிட்டார். அந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகாரினால் ரத்தானது. டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மீண்டும் தொப்பி சின்னம்தான் கேட்டார் கிடைத்ததோ குக்கர்.
புத்தம் புது குக்கர்கள்
பிரசாரத்தில் குக்கர்தான் பிரதான இடம் பிடித்தது. வீட்டில் இருந்தே குக்கர் கொண்டு வந்தார் தலைக்கு 500 ரூபாய் கொடுத்தனர் தினகரன் ஆட்கள். எப்படி எல்லாம் பணம் கொடுக்கவேண்டும் அந்த வழிகளை எல்லாம் தேர்ந்தெடுத்தனர். 80 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானால் தான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறியிருந்தார் தினகரன். கருத்துக்கணிப்புகளும் தினகரனுக்கு சாதகமாகவே இருந்தது. சொன்னது போலவே ஜெயித்து விட்டார் தினகரன்.
மகிழ்ச்சியில் ஆர்.கே. நகர்வாசிகள்
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே பண்டிகை செலவுக்கு பயமில்லை என்று பேச்சு எழுந்தது. சொன்னது போலவே ஒரு ஓட்டு 10 ஆயிரத்திற்கு மேல் கிடைத்துள்ளது. அடகு வைத்த நகைகள் திருப்பப் பட்டு விட்டன. பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் ஆர்.கே.நகர்வாசிகள். ஆர்.கே.நகரில் எங்கு திரும்பினாலும் புத்தம் புது குக்கர்கள் பளபளக்கின்றனவாம்.
எல்லா கிரகங்களின் பார்வையும்
டிடிவி தினகரனுக்கு சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிதான் நல்லதாக இருந்திருக்கும் என்றில்லை. டிடிவி தினகரனுக்கு நவகிரகங்களின் நல் ஆசியும் கிடைத்திருக்க வேண்டும். அதனால்தான் இப்படி திகுடு முகுடான வெற்றியை பெற்றுள்ளார் தினகரன்.
தினகரனின் யாகங்கள்
கோவில் கோவிலாக சுற்றி வந்த தினகரன் கால பைரவருக்கு யாகம் செய்தார். பிரத்யங்கிரா தேவியை அமாவாசை நாளில் பூஜித்தார். குலதெய்வத்தை விடாமல் கும்பிட்டார். யாகங்களும், ஹோமங்களும் செய்த கடவுளை குளிர்வித்தது போல, மக்களையும் குளிர குளிர பணத்தால் குளிர்வித்து வெற்றியை பெற்றுள்ளார் டிடிவி தினகரன்.