ஆர்.கே.நகரில் வாகை சூடும் மகாபிரபு யார்? - நாளை வாக்கு எண்ணிக்கை - 19 சுற்றுகளும் விறுவிறு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்த காரணத்தால் நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் காலையிலிருந்தே அலை அலையாக வந்து ஓட்டுப் போட்டனர். இந்த முறை பெருமளவிலான வாக்குகள் பதிவாகி உள்ளன. அதாவது 77 சதவீத வாக்குகள் அளவுக்குப் பதிவாகியுள்ளன. பெண்கள் அதிகம் போட்டுள்ளனர்.
எகிறும் எதிர்பார்ப்பு
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் பின்னணியில் ஏகப்பட்ட சர்ச்சைகள், புகார்கள், கொந்தளிப்புகள் நிலவின. தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு பின்னர்தான் நடந்தது. பணம் வரலாறு காணாத அளவுக்கு விளையாடியது. எனவே அதிக அளவிலான வாக்குப் பதிவைப் பார்த்தால் பெரும் சுவாரஸ்யமான எதிர்பார்ப்புதான் எழுகிறது.
விடாமல் குத்திய மக்கள்
மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவி பாட் இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ராணி மேரி கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய துணைராணுவப் படையினர், சென்னை மாநகர காவல்துறை உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீல் வைத்து வாக்குப் பெட்டிகள் வைத்துள்ள அறைக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
விறுவிறு எண்ணிக்கை
நாளை வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல்துறை ஆணையர் ஆய்வு செய்தார். நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 வாக்குச்சாவடிகளின் பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி பார்த்தால் 18 முழு சுற்றுக்கள், ஒரு அரை சுற்று என மொத்தம் 19 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் கூறியுள்ளார்.
முறைகேடு நடக்காது
வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். வெப் காஸ்டிங் மூலமும் பார்க்க முடியும். இதனால் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தேர்தலை எவ்வாறு அமைதியாக நடத்தி முடித்தோமோ, அதே போல வாக்கு எண்ணிக்கையும், நேர்மையாக நியாயமாக நடக்கும். முகவர்கள், வேட்பாளர்கள் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறை யை பார்வையிடலாம். அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுவதால், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் கார்த்திக்கேயன்.
ஆர்.கே. நகர் யாருக்கு?
நாளை காலை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சற்று நேரத்திலேயே அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற நிலவரம் தெரியவரும். மதியத்துக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆர்.கே. நகரில் வெற்றி வாகை சூடி எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழையப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.