ஆர்.கே நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல்.. காரணம் இதுதான் என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
ஆர்.கே நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆர்.கே நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரும் என்று தெரிவித்து உள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்ட அமைச்சர்களால் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர் எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்வதையே பெரும் பணியாக செய்து வந்தார்.
ஏழை எளிய மக்களுக்கு அவர் செய்த உதவிகளை யாரும் மறுக்க முடியாது. அப்படி வளர்ந்தது தான் அதிமுக. ஆனால், இப்போது சிலர் தான் இல்லாவிட்டால் கட்சியே இருக்காது என்பது போல பேசி வருகிறார்கள். இங்கு உழைப்பவர்களுக்கு மட்டும் தான் இடம் இருக்கிறது. ஏமாற்றுபவர்களுக்கு அல்ல.
45 ஆண்டுகளுக்கு முன் சாதரண நபராக இருந்த நான் இன்று வனத்துறை அமைச்சராக உள்ளேன். இப்படி சாதாரண தொண்டர்கள் தான் நமது கட்சிக்கு பெரும் பலம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக் காத்த இந்த இயக்கத்தை நாம் நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.
குறுக்கு வழியில் வெற்றி பெற்ற ஒரு சிலர் நமது ஆட்சியை கலைப்பதற்கு 3 மாதம் கெடு வைக்கிறார். ஆனால், 3 மாதத்திற்கு அவர் இருந்தால் தானே, அதை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்.
அவர் மீது வழக்குகள் குவிந்து இருக்கின்றன. அதில் தீர்ப்பும் வர இருக்கிறது. அதன்பிறகு ஆர்.கே நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.