ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கடத்தியதாக ஆவடி குமார் சிறைபிடிப்பு
ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க நிர்வாகி ஆவடி குமார் சிறைபிடிக்கப்பட்டார்.
சென்னை : ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக காரில் பணம் கடத்தியதாக அ.தி.மு.க நிர்வாகி ஆவடி குமாரை பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் .
ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் தொகுதியில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பறக்கும் படை அதிகாரிகள், துணை ராணுவத்தினர் என பலத்த சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை ஆர்.கே நகர் தொகுதியில் அ.தி.மு.க கட்சியின் தலைமை கழக பேச்சாளரான ஆவடி குமார் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய தனது காரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்தியதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து, அவரது காரை தேர்தல் அதிகாரி குமார் சோதனையிட்டு, ஆவடி குமாரிடம் விசாரணை நடத்திவருகிறார். இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் சூழ்ந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆவடி குமார் பேசும்போது, டி.டி.வி தினகரன் தரப்பு வேண்டுமென்றே தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும், பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.