தேர்தல் பணிகள் விறுவிறு... தூசிதட்டப்படும் வாக்குப்பெட்டிகள்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. தொகுதியில் வாகன சோதனை, வாக்குப்பெட்டிகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Recommended Video
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பெட்டிகளை சரிபார்க்கும் பணி சென்னை புளியந்தோப்பில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதே போன்று பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் விதமாக வாகன பரிசோதனையும் தொகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பணப்பட்டுவாடா புகாரின் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21ம் தேதி வாக்குப்பதிவும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
ஆர்கே நகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு திங்கட்கிழமை மட்டுமே அவகாசம் உள்ளது. இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களின் அடிப்படையில் ஆர்கே நரில் 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. இதனிடையே வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளையும் தொடங்கியுள்ளனர்.
வோகன சோதனையில் போலீசார்
இதனால் பணப்பட்டுவாடாவை தவிர்க்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொகுதியை சார்ந்த மக்கள் அல்லாதோரின் வாகனங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் ஒவ்வொரு உடைமைகளாக எடுத்து சோதனை செய்து வருகின்றனர்.
வாக்குச்சாவடி முன்பு அடையாளம்
இதே போன்று வாக்குப்பதிவு தினத்தன்று கட்சிகளால் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகள் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. இதற்காக வாக்குச் சாவடிகளுக்கு அருகில் மஞ்சள் நிற பெயின்ட்டால் வாக்குச்சாவடிக்கு இருக்கும் தூரத்தை குறிப்பிட்டு எழுதும் பணியும் நடைபெற்று வருகிறது.
1300 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ஆர்.கே.நகரில் 50 இடங்களில் 256 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான 25 சதவீத இருப்பையும் சேர்த்து (reserve) 360 கட்டுப்பாட்டு கருவிகள், 360 ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள், 1300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்ற வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
சரிபார்க்கும் அதிகாரிகள்
இவை முறையாக செயல்படுகின்றனவா என்று அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர். சென்னை புளியந்தோப்பில் உள்ள அரசு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.