தமிழகமே எதிர்பார்க்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தல்?
தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு ஜூன் 5-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தற்போது ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதால் அவருக்காக 2015-ம் ஆண்டு ஆர்கே நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா செய்தார். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார்.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தற்போது ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் இடைத் தேர்தலை சந்திக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3 தேர்தல்களை எதிர்கொள்கிறது ஆர்.கே.நகர் தொகுதி.
இத்தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்திருந்தார்.
இதற்கு ஆர்கே நகர் தொகுதி அதிமுகவினர் முன்னர் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அதிமுக தொண்டர்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியை ஆதரித்து வருகின்றனர்.
இதனால் தீபாவுக்கு அதிமுகவினர் ஆதரவு இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஆர்.கே.நகர் தொகுதியை எப்படியும் கைப்பற்றுவது என திமுக வியூகம் வகுத்து வருகிறது. தமிழக அரசியல் களத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.