தீவிரமாகும் பணப்பட்டுவாடா..ஆர்கே நகர் தேர்தல் ரத்து?..அரசியல் கட்சியினருடன் பத்ரா தனித்தனியாக ஆலோசனை
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா தீவிரமடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆர். கே.நகரில் பணப்பட்டுவாடா மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அரசியல் கட்சியினருடன் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா விவகாரம் தலைத்தூக்கியுள்ளது.
ஆளும் கட்சியினர் ஒரு வோட்டுக்கு ரூ. 6000 கொடுப்பதாகவும் அத்தனையும் ரூ.2000 நோட்டுகள் என்றும் எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர். நேற்று ஒரே நாளில் 80 சதவீதம் பணம் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு இன்றுக்குள் விநியோகம் செய்யப்படும் என்று அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
நேற்று ஆலோசனை
மேலும் இதற்காக ரூ.100 கோடி பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆர்கே நகரில் பணம் பட்டுவாடா தொடர்பாக வந்த புகார்கள் குறித்து தலைமை செயலகத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனை
தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இந்தநிலையில் இன்று விடிய விடிய காசிமேட்டில் பணப்பட்டுவாடா நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆலோசனை முக்கியத்துவம்
ஒரு ஓட்டுக்கு ரூ. 4000 விநியோகம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கருத்து கேட்பு
இந்நிலையில் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா அரசியல் கட்சியினருடன் தனித்தனியாக கருத்து கேட்பு நடத்தி வருகிறார். பணப்பட்டுவாடா அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.