ஆர்.கே.நகரைத் தாரை வார்த்த வெற்றிவேலுக்கு பெரம்பூரைப் பரிசாகக் கொடுத்த "அம்மா"
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா மீண்டும் எம்.எல்.ஏ. ஆவதற்காக தனது ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெற்றிவேலுக்கு இம்முறை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சுருக்கமாக ஆர்.கே.நகர் எனக் குறிப்பிடப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியானது வட சென்னையில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்றாகும்.
முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றது, தற்போது மீண்டும் சட்டசபைத் தேர்தலில் களமிறங்குவது உள்ளிட்ட காரணங்களால் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது ஆர்.கே.நகர் தொகுதி.
வெற்றிவேல்...
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது இப்பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சேகர்பாபுவை தோல்வியடையச் செய்தவர் வெற்றிவேல். இந்தத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் சேகர்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கோட்டை...
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படுவது சென்னை ஆர்.கே.நகர் தொகுதி. 2001 மற்றும் 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சேகர்பாபு வெற்றி பெற்றார். ஆனால், அவர் திமுகவிற்கு தாவியதைத் தொடர்ந்து, காங்கிரஸில் இருந்து அதிமுகவிற்கு கட்சி மாறிய வெற்றிவேலுக்கு அந்தத் தொகுதி கிடைத்தது. 2011 சட்டசபைத் தேர்தலில் சேகர்பாபுவை வீழ்த்தி மீண்டும் ஆர்.கே.நகரை அதிமுக கோட்டை என நிரூபித்தார் வெற்றிவேல்.
பதவியை இழந்த ஜெ...
ஆனால், கடந்தாண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பதவியையும் பறி கொடுத்தார். இதனால், மீண்டும் அவர் முதல்வராக இடைத்தேர்தலில் போட்டியிட வைத்து ஜெயலலிதாவை மீண்டும் எம்.எல்.ஏ. ஆக்க முடிவு செய்யப்பட்டது.
எல்லாம் அம்மாவுக்காக...
அதன்படி, ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தங்களது பதவியை ராஜினாமா செய்ய பல எம்.எல்.ஏக்கள் காத்திருக்க, அந்த வாய்ப்பு ஆர்.கே.நகர் வெற்றிவேலுக்கு வாய்த்தது. திடீரென ஒருநாள் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெற்றிவேல், ‘எல்லாம் அம்மாவுக்காக' என ரத்தினச் சுருக்கமாக தனது ராஜினாமாவிற்கான காரணத்தைத் தெரிவித்தார்.
மீண்டும் பதவி...
அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்று, மீண்டும் முதல்வராக பதவியில் அமர்ந்தார் ஜெயலலிதா. அடுத்தமாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலிலும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அவர் முடிவெடுத்துள்ளார்.
பெரம்பூர்...
இந்நிலையில், அம்மாவுக்காக ஆர்.கே.நகர் தொகுதியை தாரை வார்த்த வெற்றிவேலுக்கு இம்முறை பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்...
ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் மத்திய சென்னை மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் தான் இந்த வெற்றிவேல். பின்னர் காங்கிரசில் இருந்து பிரிந்து மூப்பனார் தொடங்கிய தமாகாவில் இணைந்தார்.
மூப்பனாருடன் நெருக்கம்...
அப்போது அவர் மூப்பனாருடன் மிகவும் நெருக்கத்தில் இருந்தார். தமாகாவிலும் அவருக்கு அதே பதவி வழங்கப்பட்டது. கராத்தே தியாகராஜன் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் காங்கிரசிலிருந்து பிரிந்து தமாகாவில் சேர்ந்தனர்.
அதிமுக பிரவேசம்...
ஒருகட்டத்தில் மூப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமாகாவில் இருந்து விலகிய வெற்றிவேல் அதிமுகவில் இணைந்தார். நீண்டகாலம் அதிமுகவில் பணியாற்றி வந்த அவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆா்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.