எம்எல்ஏ தினகரனின் ஆட்டம் ஆரம்பம்... முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு
முத்தலாக் விவகாரத்தில் தனி ஒருவனாக இருந்து மத்திய அரசை எதிர்க்கும் வகையில் தினகரன் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை : முத்தலாக் சட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முஸ்லிம்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தினகரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளராக அமோக வெற்றி வெற்றார். இதற்கு காரணம் மத்திய அரசை தைரியமாக எதிர்க்கும் எண்ணம் கொண்டவர் தினகரன் என்பதால்தான் என்ற கருத்து நிலவுகிறது.
இந்நிலையில் முஸ்லிம் பெண்களின் திருமண பந்தத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் இருந்த முத்தலாக்கை ரத்து செய்ய வேண்டும் என்று முஸ்லிம் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
குரல் வாக்கெடுப்பு
இதையடுத்து இஸ்லாமியப் பெண்களின் திருமண பாதுகாப்பு உரிமையை காக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த தடைச் சட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அலங்கோலம்
இதற்கு பலவித எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் இதுகுறித்து தினகரன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், முத்தலாக், சட்டவிரோதம் என்று அறிவிக்கும் வகையில் மத்திய அரசு இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட மசோதாவை அவசர கோலமாகவும், அலங்கோலமாகவும் கொண்டு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை
இந்தியத் துணைக் கண்டத்தை பொருத்தமட்டில் அனைத்து மதங்களும் சம உரிமையோடும் பல வேறுபட்ட பண்பாட்டையும் நாகரீகத்தையும் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்பதே தமிழகத்தின் தனிச்சிறப்பு.
பாதுகாப்பு அம்சம் தேவை
இதில் இஸ்லாமிய மக்களின் சம்பிரதாயமான முத்தலாக் முறையில் பாதிப்போ , குறைபாடோ இருக்குமேயானால் அதனை அம்மதத்தினை தழுவிய மக்களின் கருத்தினைக் கேட்டு அதன்படி ஒரு பாதுகாப்பு அம்சத்தோடு வழங்குவதுதான் ஏற்புடையதாக இருக்கும். அதுதான் முறையும் கூட.
தினகரன் கோரிக்கை
எனவே அதீத தீவிரத்தோடு கொண்டு வரப்பட்டுள்ள இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட மசோதாவை அனைத்து இஸ்லாமியர்களின் கருத்தை கேட்ட பிறகே அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்ல என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.