ஆர்கே நகர் பணப்பட்டுவாடா புகார்... தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது வழக்கு
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாரின் கீழ் தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் விநியோகம் செய்வதாக தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் வரும் 21-ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தினகரன் அணி, நாம் தமிழர் கட்சி, பாஜக என 5 முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று முதல் இந்த தொகுதியில் பணமழை பெய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. பணப்புகார் தொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ராவுடன் அனைத்து கட்சியினர் ஆலோசனை செய்தனர்.
அப்போது திமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஆளும் கட்சியினர் மீது பணப்புகார் கூறினர். நேற்று ஒரே நாளில் ரூ. 100 கோடி பணம் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் தினகரன் அணியினரும் வீடு வீடாக சென்று குக்கரையும், பணத்தையும் விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தினகரன் ஆதரவாளர் செல்வி என்பவரின் வீட்டில் இருந்து ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் புகார் தொடர்பாக சென்னை புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் 11 வழக்குகளின் கீழ் தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.