ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேதி டிசம்பருக்குள் அறிவிக்கப்படும்.. ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம்!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேதி டிசம்பர் மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேதி டிசம்பர் மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. காலியான தொகுதிக்கு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அம்பலமானதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமலே உள்ளது.
எதிர்ப்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல்
குஜராத் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் குஜராத் தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து வாய் திறக்கவில்லை.
தேர்தலுக்கு திமுக எதிர்ப்பு
இந்நிலையில் போலி வாக்காளர்களை நீக்கும் வரை ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
டிசம்பருக்குள் தேதி அறிவிப்பு
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டிசம்பருக்குள் ஆர் கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றார். மேலும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பெயர் சரிபார்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இதையடுத்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் அன்றுவரை ஆர்கே நகர் தொகுதி தேர்தல் அறிவிக்கப்படாது என நீதிமன்றம் நம்புவதாகவும் நீதிபதி கூறினார்.