ஆர்கே நகரில் பணப்புகார்... அரசியல் கட்சிகளின் பிரசாரத்தை ஆய்வு செய்த சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து அரசியல் கட்சிகள் நடத்தும் பிரசாரத்தை சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆய்வு செய்தார்.
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து, தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் பிரசாரத்தை சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆய்வு செய்தார்.
ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன் அணி ஆகியனவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தேர்தலை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எனினும் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலுக்காக சென்னை வந்துள்ள தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா , திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் பிரசாரங்களை ஆய்வு செய்தார்.
அவர்கள் கொண்டு வந்திருந்த கொடிகள், தேர்தல் அறிக்கைகள் உள்ளிட்ட விளம்பரங்கள் இடையே பணம் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளனவா என்று பத்ரா ஆய்வு செய்தார்.