ரூ.20 டோக்கன் இங்கே?... அதற்கான பணம் எங்கே?... ஆர்.கே.நகர் வாக்காளர்கள் தினகரனை கண்டித்து போராட்டம்
ரூ. 20 டோக்கனுக்கு பணம் தரவில்லை என்று டிடிவி தினகரனை கண்டித்து ஆர் கே நகர் வாக்காளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஆர் கே நகர் இடைத்தேர்தல் தன்னை வெற்றி பெற வைத்தால் வீடுதோறும் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.20 டோக்கனுக்கு பணம் தரப்படும் என்று நம்ப வைத்து ஏமாற்றியதாக அத்தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா மறைந்ததை அடுத்து காலியாக உள்ள ஆர்கே நகருக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலுக்காக அதிமுகவும், தினகரன் அணியும் காசை வாரி இறைப்பதாக தேர்தல் ஆணையரிடம் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்தன.
இந்த புகாரின் பேரில் பறக்கும் படையினரும் தீவிரமாக கண்காணித்து உரிய காரணமின்றி தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடந்தது
இதனால் தேர்தலை நிறுத்துமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேர்தலே நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. எனினும் இந்த தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று கூறிய ஆணையம் நடத்தியும் காண்பித்தது.
பாஜக வேட்பாளர்
தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாளுக்கு முன்னர் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு ஹவாலா முறையில் ரூ 20 டோக்கன் கொடுக்கப்பட்டதாக பாஜக வேட்பாளர் கரு நாகராஜன், தினகரன் மீது பகீர் புகாரை அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அபார வெற்றி
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஜெயித்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.20 நோட்டு டோக்கனில் உள்ள வரிசை எண்ணை கூறினால் பணம் கொடுப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தினகரன் அபாரமாக வெற்றி பெற்றார்.
குண்டர்கள் தாக்குதல்
இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களிடம் பணம் கேட்டு பொது மக்கள் நச்சரித்ததாக புகார் எழுந்தது. இதை சமாளிக்க தினகரன் ஆதரவாளர்கள் சிலரை தனி இடத்துக்கு வரவழைத்து பணம் கேட்பியா பணம் கேட்பியானு கும்மாங்குத்து குத்தியதாகவும், சிலருக்கு பணம்போன்று மஸ்கோத்து அல்வா சுற்றப்பட்ட பேப்பர் கட்டு வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
தினகரனுக்கு எதிராக போராட்டம்
இந்நிலையில் தினகரன் எம்எல்ஏவாக பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகிய நிலையில் இந்த பிரச்சினை இப்போது தலைதூக்கியுள்ளது. ஆர்கே நகர் மக்கள் ரூ. 20 டோக்கனை காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தினகரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.