ஆர்.கே.நகரில் குற்றவாளிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் மக்கள்... திருச்சி சிவா உற்சாகம்
விருதுநகர்: ஆர்.கே.நகரில் குற்றவாளிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூறினார்.
ராஜபாளையம் சட்டசபைத் தொகுதி திமுக சார்பில் திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜவகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், நகர செயலாளர் ராமமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில கொள்கை பரப்புச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் திருச்சி சிவா பேசுகையில், சசிகலாவின் பினாமி அரசான எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. தினகரன் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அ.தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு எற்பட்டுள்ளது.
ஊருக்கே வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள். திமுக வின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார் திருச்சி சிவா.