ஜெயலலிதாவுக்கு பிறகு எதையும் எதிர்த்துக் கேட்பதற்கு இங்கு ஆளே இல்லை- ஆர்.கே. செல்வமணி
ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு இங்கு எதையும் தட்டிக் கேட்க ஆளே இல்லை என்று ஆர்கே செல்வமணி தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு இங்கு எதையும் தட்டிக் கேட்க ஆளே இல்லாமல் போய்விட்டது என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
தமிழர்களின் உரிமைகளை காக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை புதிய அமைப்பை இயக்குநர்கள் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ், அமீர், செல்வமணி, கவுதமன் உள்ளிட்டோர் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவராக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செல்வமணி கூறுகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எதையும் தட்டிக் கேட்க யாரும் இல்லை.
உலகின் குப்பைக் கிடங்கு இந்தியா என்றால் இந்தியாவின் குப்பைக்கிடங்கு தமிழகம் ஆகும். ஐபிஎல் போட்டியை ஒரு மணி நேரம் நிறுத்தினால் தமிழர்களின் ஒற்றுமை உலகம் முழுக்க தெரிய வரும்.
சூதாட்டம் ஆடிய சென்னை அணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. அந்த ஆதரவு விவசாயிகளுக்கு இருக்காதா? என்று ஆர்.கே. செல்வமணி கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி விவகாரத்தில் நம்மிடையே ஒற்றுமை இல்லாததால் போராட்டம் வெற்றியடையாமல் இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று இயக்குநர் வி. சேகர் தெரிவித்தார்.