மரக்காணம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சிம்புவின் அத்தை மகன் உள்பட 4 பேர் பலி
விழுப்புரம்: மரக்காணம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில் இயக்குனர் டி. ராஜேந்தரின் தங்கை மகன் உள்பட 4 பேர் பலியாகினர்.
இயக்குனர் டி. ராஜேந்தரின் தங்கை மகன் ஆதிகுரு(22). மயிலாடுதுறையைச் சேர்ந்த அவர் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்றார். அவர் இன்று அதிகாலை தனது உறவினர்கள் பிரியதர்ஷினி(29), ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயராகவன்(52) ஆகியோருடன் டாடா இன்டிகா காரில் மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு கிளம்பினார்.
காரை விஜயராகவன் ஓட்டி வந்தார். கார் அதிகாலை 3.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருக்கும் செட்டிக்குப்பத்தில் சென்று கொண்டிருக்கையில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஆதிகுருவின் காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஆதிகுரு, பிரியதர்ஷினி, விஜயகுரு, மற்றொரு காரில் இருந்த சுரேஷ்குமார்(19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். புதுச்சேரியை நோக்கி வந்த காரில் இருந்த சுரேஷ் குமாரின் தாய் செந்தமிழ், டிரைவர் பாக்கியராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 முடித்திருந்த புதுச்சேரியைச் சேர்ந்த சுரேஷ் குமார் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிதிருந்தார். இதற்கிடையே அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.