துப்பாக்கிசூடு: சிவகங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல்.. ஏராளமானோர் கைது!
துப்பாக்கி சூடு கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல் நடைபெற்றது.
சிவகங்கை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சிவகங்கையில் மறியல் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு, தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சிவகங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டனம் தெரிவித்து மறியல் நடத்தப்பட்டது.
ஏஐடியுசி, சிஐடியூ சங்கத்தினர் அரண்மனை வாசலில் அருகே நடைபெற்ற இந்த சாலை மறியலில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, ஸ்டெர்லைட்டை எதிர்த்தும், அதை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி நடத்திய காவல்துறை, தமிழக அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.