சொத்துக்குவிப்பு.. ஓ.பன்னீர்செல்வம் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.. ஹைகோர்ட்டில் திமுக மனு
Recommended Video
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட கோரி, ஹைகோர்ட்டில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் பல ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்து வரும் சூழலில், ஹைகோர்ட்டில் திமுக இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடுமாறு, திமுக ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அதேநேரம், வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார்.
அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ள நிலையில், 2011 தேர்தலின்போது தனது மனைவிக்கு 24.20 லட்சம் ரூபாய் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016ம் ஆண்டு தேர்தலில், 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது சந்தேகத்தை எழுப்புகிறது.
ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துகளை வாங்கியுள்ளார். சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வம் 6 மாதங்களில் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் பன்னீர்செல்வம். இதுதொடர்பாக மார்ச் 10ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.