ஒரு நாள் மழைக்கே பல் இளித்த சாலைகள்.. வெப்சைட்டிலிருந்து கான்டிராக்டர்களின் பெயர்கள் திடீர் மாயம்!
சென்னையில் ஒரு நாள் மழைக்கே புதிதாக போடப்பட்ட சாலைகள் பல்லை இளித்துள்ளன, இந்நிலையில் மழை தொடங்குவதற்கு முன்னதாகவே கான்டிரைக்டர்களின் பெயர்கள் சென்னை மாநகராட்சி வெப்சைட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஒரு நாள் மழைக்கே சென்னையில் போடப்பட்ட சாலைகள் சேதமடைந்த நிலையில் வழக்கமாக சென்னை மாநகராட்சி வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருக்கும் கான்டிராக்டர்களின் பெயர்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழை தீவிரமாகத் தொடங்கியுள்ளதால் அக்டோபர் 29ம் தேதி இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை வெளுத்து வாங்கியது. இதில் ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் மேலும் சேதமடைந்தன. இதில் மற்றொரு கொடுமையான விஷயம் புதிதாக போடப்பட்ட சாலைகள் அனைத்தும் தன்னுடைய தரத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.
இந்த சாலைகளைப் போட்டவர்களை சென்னை மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். அவர்களை தொலைபேசியில் பாராட்டலாம் என்று சென்னை மாநகராட்சி இணையதளத்தில் சாலை போட்ட கான்டிராக்டர்களின் பெயரைத் தேடினால் அதில் மற்றொரு திடுக் சம்பவம். பருவமழை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கான்டிராக்டர்களின் பெயர்கள் இணையதளத்தில் இருந்து தூக்கப்பட்டு விட்டது.
தகவல்கள் திடீர் மாயம்
வழக்கமாக எந்த சாலையை எந்த கான்டிராக்டர் போட்டார் அவரின் விபரங்கள், சாலையைப் போட ஒதுக்கப்பட்ட தொகை உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்தத் தகவல்கள் ஏன் திடீரென மாயமாகியுள்ளது என்பது தான் தற்போதைய கேள்வி. அப்படியானால் தரமில்லாத சாலைகளைப் போடும் கான்டிராக்டர்களுக்கு அதிகாரிகளும் துணை போகிறார்கள் என்பது தான் இதில் இருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமா?
அதிர்ச்சியை அளிக்கும் செயல்
ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் அறப்போர் இயக்கம் இந்த உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 350 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு சாலைப் பணிகள் சென்னை நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அந்த சாலைகளை அமைத்துத் தந்த கான்டிராக்டர்கள் தொடர்பான தரவுகள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிப்பதாக அறப்போர் இயக்கத்தினர் கூறி உள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கான்டிராக்டர்கள் தொடர்பான தரவுகள் நீக்கப்பட்டது ஏன்? அதனை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் சென்னை மாநகர ஆணையர் கார்த்திகேயனிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அரசின் திட்டங்களில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதால் உடனடியாக அந்தத் தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதிகாரிகளுக்கும் பங்கு
ஆனால் தரமில்லாத சாலைகள் போட்ட கான்டிராக்டர்கள் எகத்தாளமிடுகின்றனர். எங்களுக்குத் தெரியும் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையைத் தான் எடுக்கும் என்று. ஏனெனில் அரசு கான்டிராக் என்னும் சங்கிலித் தொடரில் ஒவ்வொருஅதிகாரியும் கணிசமான தொகையை எங்களிடம் இருந்து பெற்றுள்ளனர் என்று தில்லலாக சொல்கின்றனர் சில கான்டிராக்டர்கள்.