ஆமை வேகத்தில் நெல்லை-ராஜபாளையம் சாலை விரிவாக்கம்.. அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நெல்லை: நெல்லை-ராஜபாளையம் சாலை விரிவாக்க பணி மந்தமாக நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் இருந்து வருகின்றனர்.
நெல்லை-ராஜபாளையம் இடையே சாலை குறுகலாக இருந்து வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதையடுத்து இந்த சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது.
அதன்படி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் பணி தொடங்கியது. 10 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் பணிக்காக சாலை ஓரத்தில் இருந்த செடிகள், மரங்கள் அகற்றப்பட்டு பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது.
இதனால் தற்போது சாலை விரிவாக்கம் செய்யும் இடத்திற்கும் ரோட்டிற்கும் இடையே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அதில் தவறி விழுந்து விடாமல் இருப்பதற்காக அருகில் மணல் மூடைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது காற்று பலமாக இருப்பதால் இந்த தடுப்புகள் சரிந்து சாலைகளில் விழுந்து வருகிறது.
மேலும் தடுப்பு கயிறுகளும் அறுந்து பறந்து விட்டது. இதன் காரணமாக சாலை விரிவாக்க பணி பகுதியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். குறிப்பாக இருச்சக்கர வாகன ஓட்டிகள் கூட தடுமாறி விழும் நிலை காணப்படுகிறது. இந்த காரணத்தால் நெல்லையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு செல்ல சுமார் 30 நிமிடம் கூடுதலாக செலவாகிறது.
இந்த வழியில் எதிர் எதிரே வரும் வாகனங்களும் சாலையை கடக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. சாலை விரிவாக்கம் பணியும் மந்தமாக நடந்து வருவதால் இந்த பணி விரைவாக முடியும் என்ற நம்பிக்கை வாகன ஓட்டிகளிடம் இல்லை. இதை கருத்தில் கொண்டு எச்சரிக்கை பலகை அதிகம் வைக்க வேண்டும். இரவில் ஓளிரும் பலகையை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.