கஸ்தூரிரங்கன் அறிக்கைக்கு எதிர்ப்பு... கேரள எல்லையில் சாலை மறியல்
செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை அமுல்படுத்த கூடாது என்று வலியுறுத்தி ஆரியங்காவில் நடந்த பஸ் நிறுத்த போராட்டத்தினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மத்திய அரசு மேறகு தொடர்ச்சி மலையின் இயற்கை வளத்தையும், சுற்று சூழலையும் பாதுகாக்க பரிந்துரை வழங்குமாறு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான உயர்மட்டசெயல் கமிட்டியை அமைத்தது.
இந்த கமிட்டியான குஜராத், மகராஷ்டிரா, கர்நாடகா , கேரள ஆகிய மாநிலங்களில் சுமார் 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் மேற்கு தொடர்ச்சி மலையை உயிரியல் வளம் மிக்க பகுதியாக கருதி அதை பாதுகாக்கும் வகையில் மணல் குவாரி, கல்குவாரி மற்றும் தொழிற்சாலைகள் எதுவும் கட்டப்பட கூடாது என தடை விதித்தது.
இது லட்சக்கணக்கான கேரள மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் கேரளாவில் இந்த கமிட்டி அறிக்கையை அமுல்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த கமிட்டி அறிக்கையை அமுல்படுத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டை எல்லையில் உள்ள ஆரியங்காவில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்தை ஓட்டி ஜீப், ஆட்டோக்கள் இயங்கவில்லை. போராட்டம் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால் தமிழக கேரள எல்லையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.