பள்ளி காலை வழிபாட்டில் இனி “சாலை பாதுகாப்பு விதி உறுதிமொழி” - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: சாலை பாதுகாப்பு விதிகளை உறுதிமொழியாக மாணவர்கள் எடுத்துக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், "இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கின்றனர்.
சாலை விதிகளை மீறுதல்:
உலக அளவில் வாகன எண்ணிக்கையில் இந்தியா ஒரு சதவீதத்தை மட்டும் கொண்டிருந்தாலும் விபத்துகள் நடப்பதில் 10 சதவீதமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை மீறுவதே ஆகும்.
தனிமனிதனுக்கும் பொறுப்பு:
விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கமும், தனியார் தொண்டு நிறுவனமும் மட்டுமல்லாது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு உள்ளது.
சமுதாயத்தில் மாற்றம்:
இதை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களிடையே மட்டுமல்லாது சமுதாயத்திலும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
உறுதிமொழி அவசியம்:
இதற்காக தமிழக பள்ளிக்கல்வி துறை, பள்ளிக்கூடங்களில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளிலும், காலை வழிபாட்டு கூட்டத்தில் கீழ்கண்ட வாசகங்களை உறுதிமொழியாக மாணவ, மாணவிகள் எடுக்க ஆவன செய்யுங்கள் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
சாலை பாதுகாப்பு விதிகள் உறுதிமொழி:
* நான் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவேன்.
* நன்றாக பழகியபின்பே வாகனம் ஓட்டுவேன்.
* டிரைவிங் லைசென்சு பெற்ற பிறகே வாகனம் ஓட்டுவேன்.
* நான் எனது பெற்றோருக்கும், டிரைவர்களுக்கும் வாகனம் ஓட்டும்போது பெல்ட், ஹெல்மெட் அணிந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்துவேன்.
* நான் வேக கட்டுப்பாட்டை மீறாதவாறு பார்த்துக்கொள்வேன்.
* எனது டிரைவர் அசதியாக இருக்கும்போது வாகனம் ஓட்ட அனுமதிக்கமாட்டேன்.
* டிரைவர் வாகனத்தை ஓட்டும்போது செல்போன் பேச அனுமதிக்கமாட்டேன்.
* வேன் அல்லது ஆட்டோவில் பயணம் செய்தால் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றுவதை அனுமதிக்கமாட்டேன்.
* பஸ்சின் படிக்கட்டில் நின்று பயணம் செய்யமாட்டேன்.