ஊருக்குள் ஓடி வரும் நெடுஞ்சாலை மதுக் கடைகள்.. சைடு டிஷ்ஷாக மாறும் சத்துணவு முட்டை!
நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபான கடைகளை ஊருக்குள் திறக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாகவும், சைடு டிஸ்ஆக சத்துணவு முட்டைகள் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நெல்லை: நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபான கடைகளை ஊருக்குள் திறக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருவதால் பொதுமக்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மதுக்கடைகளில் சைடு டிஸ் ஆக சத்துணவு முட்டைகள் அளிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நெல்லை அருகே ஆலங்குளத்தில் இருந்த 7 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த குடிமகன்கள் நாச்சியர்புரம் விலக்கு பகுதி கடைக்கும், பூலாங்குளம் பகுதி கடைக்கும் படையெடுத்தனர்.
இரவு நேரங்களிலும் வெளியூரை சேர்ந்தவர்கள் ஆட்டோ, பைக்குகளில் மது வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக பூலாங்குளம் பகுதியில் உள்ள பள்ளி, மாணவ, மாணவிகளுக்கும், பெண்களுக்குகம் கடும் பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பூலாங்குளம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திடீரென மாலை திரண்டனர். இதனால் ஏதேனும் ஆபத்து வரக் கூடாது என கருதி ஊழியர் கடையை மூடி விட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஐய்ப்பன் மற்றும் போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் முற்றுகையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பொதுமக்கள் பலர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பாரில் சோதனையிட்டனர். அப்போது அங்கு நில மை அச்சு வைக்கப்பட்ட சத்துணவு முட்டைகள் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர். இதனால் சத்துணவு முட்டைகளில் ஊழலும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊருக்க திறக்க முயற்சி செய்வதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.