சுதந்திர தினம் எதிரொலி.. காமராஜர் சாலை, ராஜாஜி சாலைகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு
சென்னை: சென்னையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை காமராஜர் சாலை, கொடிமரச் சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றில் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தவுள்ளார். சுதந்திர தின விழா அணிவகுப்பும் நடைபெறும். இதையொட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் மேற்கொண்டு வருகின்றன.
கடற்கரை காமராஜர் சாலை, கொடிமரச் சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றில் நாளை காலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இங்குதான் சுதந்திர தின விழா நடைபெறவுள்ளது. மேலும் அணிவகுப்பும் நடைபெறுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு, வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.