தாசில்தார் வீட்டுக் கதவை உடைத்து 10 பவுன், 3 கிலோ வெள்ளி கொள்ளை
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தாசில்தார் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் உள்ள எம்.எஸ்.நகரில் வசித்து வருபவர் ஸ்ரீதர், இவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மினி துணை வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார்.
கணவன்-மனைவி இருவரும் மதுரையில் உள்ள அவர்களது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டு நேற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.