ஜோலார்பேட்டையில் ஓடும் ரயிலை நிறுத்தி கைவரிசை... பெங்களூர் எக்ஸ்பிரஸில் பயணிகளிடம் 25 பவுன் கொள்ளை
வேலூர் அருகே ஓடும் ரயிலை நிறுத்தி பெங்களூர் எக்ஸ்பிரஸில் பயணிகளிடம் 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை: வேலூர் அருகே ஓடும் ரயிலை நிறுத்தி அதிலிருந்த பயணிகளிடம் இருந்து 10 பேர் கொண்ட கொள்ளை கும்பல் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலானது நள்ளிரவு ஒரு மணி அளவில் வேலூர் மாவட்டம், ஜோலார் பேட்டை அருகே வந்தது. அப்போது திடீரென ரயில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இரவு நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எஸ்3 முதல் எஸ் 8 வரை 6 பெட்டிகளில் 10 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பயணிகளிடம் இருந்து 25 பவுன் நகைகள், செல்போன், ஆகியற்றை பறித்த அவர்கள் தப்ப முயன்றனர்.
அப்போது பயணிகளின் அலறல் சப்தம் கேட்டு மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். எனினும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்ற அவர்கள் தயாராக இருந்த வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவர் ஏற்கெனவே ரயிலில் ஏறிவிட்டு சமயம் பார்த்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு பதுங்கியிருந்த மற்ற கொள்ளையர்கள் ரயிலில் ஏறி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.