'நான் வாழ்வதற்கு வழிவகை செய்யுங்கள்!' - மத்திய அரசுக்கு ராபர்ட் பயஸ் வேண்டுகோள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், தனக்கு பரோல் வழங்கப்படாதது குறித்து மத்திய உள்துறை அமைச்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், தனக்கு பரோல் வழங்கப்படாதது குறித்து மத்திய உள்துறை அமைச்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், மத்திய உள்துறை அமைச்கத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். ' ஒருநாள்கூட ஜாமீனிலோ பரோலிலோ செல்லாமல் 27 ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறேன். என் குடும்பத்தோடு நான் வாழ வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் பயஸ்.
சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக வலம் வருகிறார் ராபர்ட் பயஸ். இவருடைய மனைவி மற்றும் ஒரே மகன் ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். சிறை விதிகளின்படியும் ஒருநாள்கூட பரோல் விடுப்பு கேட்டு பயஸ் விண்ணப்பம் செய்ததில்லை.
பேரறிவாளன் பரோல் விடுப்பு கேள்விக்குறியான நேரத்தில்கூட, 'தயவு செய்து அவருக்குப் பரோல் கொடுங்கள்' எனக் கோரிக்கை வைத்தார் பயஸ். இந்நிலையில், புழல் சிறையின் உயர் அதிகாரிகளின் உதவியோடு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
கடந்த 04.04.2018ம் தேதி அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தின் நகலை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சட்டத்துறை அமைச்சருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். ராபர்ட் பயஸ் மனுவில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் இதுதான்...!
1) 02.03.2016 அன்று அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஏழுபேரையும் விடுதலை செய்து அதுகுறித்து மத்திய அரசுக்கு கருத்து கேட்டு எழுதிய கடிதம்
2) இந்த கடிதத்தின் மீது மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் பதில் தரவேண்டும் என 23.01.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு
3) நாட்டில் எந்தவொரு ஆயுள் தண்டனை சிறைவாசியையும் தண்டனைக் கழிவுடன் 25 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் 26.09.2003ல் வழங்கிய வழிகாட்டுதல்
4) எம்.கே.பாலகிருஷ்ணன் VS மத்திய அரசு என்ற வழக்கில் மேற்சொன்ன தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டலை அப்படியே ஏற்று ஜூன் 2004-ல் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம்
5) ஒப்புதல் வாக்குமூலங்களை முதன்மை ஆதாரமாகக் கொண்டு தண்டனை அளித்தது தவறு என்றும் வழக்கின் புலனாய்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளை அம்பலப்படுத்தியும் ஏழுபேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க கோரியும் சோனியா காந்திக்கு 12.12.2017 அன்று நீதியரசர் கே.டி.தாமஸ் எழுதிய கடிதம்
மொத்தமாக ஆறு ஆவணங்களை இணைத்து அனுப்பியிருக்கிறார். மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு தலைமை வகித்த நீதியரசர் கே.டி.தாமஸ், சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில் எஞ்சியுள்ள இரண்டு நீதிபதிகளுள் ஒருவரும் வழக்கின் தீர்ப்பை எழுதியவருமான நீதியரசர் D.P.வாத்வா, தன்னை நிரபராதி எனக்கூறி விடுதலை செய்துள்ளதையும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் ராபர்ட் பயஸ்.