என்னை என்கவுண்டரில் கொன்னுடுவாங்க.. பதறும் ராக்கெட் ராஜா.. வாட்ஸ்அப்பில் பரபரப்பு வாக்குமூலம்
நெல்லை: நாடார் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வாட்ஸ் அப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நான் இறந்தால் அதற்கு காரணம் நெல்லை போலீசார்தான் என அவரே வீடியோவில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச பண்ணையார், 13 வருடங்கள் முன்பு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னையில் வைத்து போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து அடுத்த மக்களவை தேர்தலிலேயே, திமுக சார்பில் களம் கண்ட வெங்கடேச பண்ணையார் மனைவி ராதிகா செல்வி எம்.பியானார்.
இந்நிலையில், வெங்கடேச பண்ணையாருக்கு நெருக்கமான, நாடார் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். தலைமறைவாக இருந்தபடியே வேண்டியற்றை சாதித்தும் வருகிறார் ராக்கெட் ராஜா.
ராக்கெட் ராஜா தலைமறைவாக உள்ள நிலையில், அவரை என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சுங்க இலாகா அதிகாரியும், ராக்கெட் ராஜாவின் சகோதரருமான சிவனேசன் ஏற்கெனவே குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் நேற்று ராக்கெட் ராஜா வாட்ஸ் அப் மூலம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ' என்னை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். என்மீது வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில் என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் போலீஸார் செயல்படுகின்றனர். ஒருவரை தூதுவராக விட்டு கூட என்னை சரணடைய கூறினார்கள். ஆனால் நான் சரணடைந்தாலும் என்னை கொல்வது உறுதி என தூதுவந்தவர் கூறிவிட்டு சென்றார். அதனால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற முயற்சி என்பது நன்றாக தெரிகிறது.
இது முழுக்க முழுக்க நெல்லை எஸ்.பி அருண் சக்திவேல் குமாரின் தவறான புரிதலால் நடைபெற்று வருகிறது. இது என்னுடைய கடைசி வாக்குமூலமாகக் கூட இருக்கலாம். என்னை முறையாக கையாண்டால் நான் சரணடைகிறேன். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நெல்லை போலீஸாரே காரணம்' என ராக்கெட் ராஜா அந்த வீடியோவில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.