காமராஜரை இழிவுபடுத்துவதா... கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து நாடார் சமுதாயத்தினர் போராட்டம்
சென்னை: பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து நாடார் அமைப்பினர் இன்று கார்த்தி சிதம்பரம் வீட்டுக்கு அருகே திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், தொடர்ந்து காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசி வருவதை காங்கிரஸார் கைவிட வேண்டும். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்துத்தான் பேச வேண்டும். வாஜ்பாய் செய்த சாதனைகளை மோடி பேசுவதே இல்லை. அதேபோல காங்கிரஸாரும் அடுத்து நடக்கப் போவது குறித்துத்தான் பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது காங்கிரஸாரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இளங்கோவனும் கார்த்தியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கு எதிராக நாடார் சமூகத்தினர் கிளம்பியுள்ளனர்.
சுபாஷ் பண்ணையாரின் அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவை மற்றும் நாடார் மக்கள் சக்தி சார்பில் இன்று கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு ராக்கெட் ராஜா என்பவர் தலைமை தாங்குவதாகவும், இன்று காலை நுங்கம்பாக்கத்தில் கார்த்தி சிதம்பரம் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ப.சிதம்பரம் வீிட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.. ப.சிதம்பரம் வீடு உள்ள பகுதியிலும் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
நடிகர் கார்த்திக்கு எதிராகவும் போராடியவர் ராக்கெட் ராஜா
ராக்கெட் ராஜா என்பவர், ஏற்கனவே நடிகர் கார்த்திக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் ஆவார். சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்தி ராக்கெட் ராஜா என்ற போக்கிரியாக நடித்திருந்தார். அந்த கேரக்டருக்கு தனது பெயரை எப்படி வைக்கலாம் என்று கூறி போராட்டம் நடத்தியவர் ராக்கெட் ராஜா என்பது நினைவிருக்கலாம்.
நாடார் முற்போக்கு இயக்கம்
அதேபோல நாடார் இளைஞர் முற்போக்கு இயக்கம் என்ற அமைப்பும் இன்று போராட்டத்தில் குதித்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இயக்கத்தைச் சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் கூறுகையில், காமராஜரைப் பற்றி கார்த்தி சிதம்பரம் தரக்குறைவாக பேசியுள்ளார். காங்கிரசுக்கு ஓட்டு கேட்க வேண்டும் என்றால் காமராஜர் பெயரையோ, காமராஜர் படத்தையோ போடக்கூடாது. அவரைப் பற்றிக் கூறக்கூடாது என்று பேசியுள்ளார். ஆகவே காங்கிரஸ் மேலிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கார்த்தி சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார் பால் பாண்டியன்.