லக்கா கிக்கா சீசன் 2 நடத்தும் ரோஜா எம்.எல்.ஏ
எம்.எல்.ஏ ரோஜா லக்கா கிக்கா சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் டிவியில் வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த ரோஜா, அதன் பின்னர் அக்கா, அண்ணி, வில்லி கேரக்டரில் நடித்தார். அதோடு அரசியலிலும் ஈடுபாடு காட்டினார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடத்திய லக்கா கிக்கா கேம் ஷோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ஒரு வருடத்திற்கு மேலாக நிகழ்ச்சியை நடத்தினார்.
லோக்சபா தேர்தலும், ஆந்திர சட்டமன்ற தேர்தலும் வந்ததால் அதில் போட்டியிடுவதற்காகவும், பிரச்சாரம் செய்வதற்காகவும் செல்ல வேண்டியது இருந்ததால் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்று விட்டார்.
எம்.எல்.ஏ ரோஜா
இதனிடையே, நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் வெற்றி பெற்றுள்ளார்.
அமைச்சர் வாய்ப்பு போச்சே
தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகிவிட்டார். ஆனால் அவர் சார்ந்த கட்சி தோல்வியை சந்தித்து விட்டது. ஜெயித்திருந்தால் ரோஜா அமைச்சராகியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மீண்டும் டிவி நிகழ்ச்சி
இப்போது வெறும் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் மீண்டும் லக்கா கிக்கா நிகழ்ச்சிக்கு வந்து விட்டார். நிகழ்ச்சியில் சில மாற்றங்களுடனும், புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
உற்சாக நடனம்
கடந்த 30ந் தேதி முதல் லக்கா கிக்காவின் சீசன் 2 ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு லக்கா கிக்கா ஒளிபரப்பாகிறது. புதிய உற்சாகத்துடனும், துள்ளல் நடனத்துடனும் நிகழ்ச்சியை நடத்தினார் ரோஜா.
அரசியல்வாதியின் நிகழ்ச்சி
பொதுவாக அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற்றால் சினிமாவில் நடிக்க யோசிப்பார்கள் ஆனால் நடிகை ரோஜா எம்.எல்.ஏ ஆன பின்னரும் மீண்டும் சினிமாவில் வில்லியாக நடிக்கவும், டிவி நிகழ்ச்சி நடத்தவும் செய்கிறார் ரோஜா.