தொடர் மழை: கொத்தவால்சாவடி அருகே கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது
ராயபுரம்: தொடர் மழையின் காரணமாக சென்னை கொத்தவால்சாவடி அருகே கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொத்தவால்சாவடி அருகே உள்ள ஏழுகிணறு நாட்டு பிள்ளையார்கோவில் தெருவில் ஹேமந்த்குமார் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது. பழமையான இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஒரு இரும்பு கடை இயங்கி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கடை பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கட்டிடம் வலுவிழந்து காணப்பட்டதால் அதனை உடனடியாக இடித்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து கட்டிடம் இடிக்கப்பட்டது.