கோடை விடுமுறையும் அதுவுமாக ரோப் கார் சேவையை நிறுத்திய பழனி கோவில் நிர்வாகம்!
பழனி: பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை பராமரிப்பு பணிக்காக ஒருமாத காலம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் நிலையில் இந்த நேரம் பார்த்து ரோப் காரை நிறுத்தியுள்ளது அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு படிப்பாதை, வின்ச், ரோப்கார் என மூன்று பாதைகள் வழியாக செல்வது வழக்கம்.
ஊனமுற்றோர், முதியோர், குழந்தைகள் ஆகியோர் மலைக்கோவிலுக்கு செல்வதற்காக வசதியாக ரோப்கார் சேவை தொடங்கப்பட்டது, இந்த ரோப்கார் சேவையை தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒருநாளும், ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஒருமாத காலமும் நிறுத்துவது வழக்கம். எப்போதும் ஜூன் மாதத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடத்துவது வழக்கம். ஆனால் தற்பொழுது ஒரு மாதத்திற்கு முன்பே ஆண்டு பராமரிப்பு பணிக்காக இன்று (08.05.15) முதல் ஒருமாத காலத்திற்கு நிறுத்தபட்டுள்ளது.
கோடை விடுமுறை என்பதால் பழனிக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ரோப் கார் நிறுத்தப்பட்டுள்ளதால் முதியோர், குழந்தைள், ஊனமுற்றோர் என அனைவரும் அவதி அடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது.